துபையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு


அரபுலகின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் துபையில்,கடந்த 12,13,14,ஆகிய தேதிகளில்(வியாழன்,வெள்ளி,சனி) “அமைதி வழியில் உலகை ஒருங்கிணைப்பது”என்ற கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு, துபை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.12 ந் தேதி வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சிகள் அலுவல் ரீதியாக தொடக்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக  வெள்ளிக்கிழமை, ஜுமுஆ தொழுகை இந்த மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்  குவைத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷைக் மிஷ்அரி அல் அஃபாஸி குத்பா உரை நிகழ்த்தி ஜுமுஆ தொழுகையை நடத்தினார்.
புகழ் பெற்ற இஸ்லாமிய வல்லுனர்களான டாக்டர் ஜாகிர் நாயக்,யூசுஃப் எஸ்டிஸ்,அப்துல் ரஹீம் கிரீன்,ஹுசைன் யீ,மற்றும் சயீத் ராகீஷ்(சோமாலியா),டாக்டர் தவ்ஃபீக் சவுத்ரி (ஆஸ்திரேலியா), முஹம்மது சலாஹ்(அமெரிக்கா),அப்துல் பாரி யஹ்யா (அமெரிக்கா),முஹம்மது அல் ஷரீஃப் (கனடா),அஹமது ஹாமிது (ஹைதராபாத்,இந்தியா),மற்றும் மாயன் குட்டி மாதிர் (கேரளா அரசு வழக்கறிஞர்) ஆகியோர் இஸ்லாம் குறித்த பல்வேறு தலைப்புகளில் மாநாட்டு அரங்கில் உரையாற்றினர்.ஒவ்வொரு அறிஞர்களின் உரைக்கு பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதிலளித்தனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளிலும், மற்றும் இறுதி நாளின் இறுதி நிகழ்ச்சியாக அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி விரிவாக நடைபெற்றது.முஸ்லிமகாத சகோதர சகோதரிகள் இஸ்லாம் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர்.அவர்களில் பலர் அல்லாஹ்வின் கிருபையால் அதே நேரத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.இந்த மாநாட்டில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

  


இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக,இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாம் எவ்வாறு முன்னோடியாக விளங்குகிறது என்பதை உபகரணங்களுடன் விளக்கி நடைபெற்ற  இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி,இஸ்லாத்தின் சிறப்புக்களை முஸ்லிமாகாத சகோதரர்களுக்கு இலகுவாக விளங்க செய்ததில் முக்கிய பங்காற்றியது.இதல்லாமல் ஹலால் பொருள்களை கொண்ட சந்தை,புத்தகம்,குறுந்தகடுகள் விற்பனை மகளிர்,சிறுவர் அரங்கம் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் இடம்பெற்றிருந்தது.

பல்வேறு சர்வதேச பொருளாதார பிரகடனங்களுக்கும்,கண்காட்சிகளுக்கும் பெயர்போன துபை உலக வர்த்தக மையம்,இந்த மாநாடு நடைபெற்ற மூன்று நாள்களில் முழுக்க முழுக்க இஸ்லாமிய மயமாக மாறிப்போனது.சுருங்க சொன்னால்,நவீனத்தை இஸ்லாமிய மயமாக்கி காட்டியதில் இம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்வின் கிருபையால் சாதனை புரிந்துள்ளனர்.