ஹஜ்ஜின் நடைமுறை விபரங்கள்!

துல்ஹஜ் 8 ஆம் நாள்:
துல்ஹஜ் 8 ஆம் நாள் தர்வியா நாளாகும். யார் தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்ய நாடியிருக்கின்றார்களோ அவர்கள் மீண்டும் இஹ்ராம் கட்டிக் கொண்டு, ஹஜ்ஜுக்கான கிரியைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மீகாத் எல்லையில் எவ்வாறு இஹ்ராம் கட்டிக் கொண்டீர்களோ, அதற்கு என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடித்தீர்களோ, அதைப் போலவே இப்பொழுது இஹ்ராம் கட்டிக் கொள்ளும் பொழுதும் கடைபிடிக்க வேண்டும். இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். மக்கா வாசிகளும் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.
இஹ்ராமிற்குப் பின்,
லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்
என கூறிக்கொள்ள வேண்டும்.

பொருள் : இதோ நான் வந்து விட்டேன், யா அல்லாஹ்! ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக!
கிரான் மற்றும் முஃப்ரீத் முறைப்படி ஹஜ் செய்யக் கூடியவர்கள் ஹஜ் கிரியைகள் முடியும் வரை இஹ்ராமைக் களையாது, மீகாத்தில் இஹ்ராம் செய்ததோடு இஹ்ராமிலேயே இருத்தல் வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தொடர்ந்து இடை விடாது தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏற்கனவே நாம் சொன்னது போல நிபந்தனையின் அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள், அதாவது ஹஜ்ஜைத் தன்னால் பூரணமாக நிறைவேற்ற இயலாது என சந்தேகம் கொண்டிருக்கக் கூடிய நபர், அதற்காகத் தனியானதொரு நிய்யத்தை மொழிந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படி நிய்யத் செய்திருப்பவருக்கு ஹஜ்ஜை முறிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நிகழுமெனில் அவர், எந்த வித பரிகாரத்திற்கும் உட்பட மாட்டார் என்றும், அவர் மறுவருடம் விடுபட்ட ஹஜ்ஜைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முன்பு கூறி இருந்தோம். அதன்படி இப்பொழுது அதே முறைப்படி ஹஜ் செய்ய விரும்புபவர், அதற்கான நிய்யத்தை மொழிந்து கொள்ளலாம்.
லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க், லா ஷரீகலக்.


பொருள் :
இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். யா அல்லாஹ்! இதோ உன் அழைப்பிற்குப் பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். இதோ உன் அழைப்பிற்குப் பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். உனக்குக் கூட்டுக் காரர் (எவரும்) இல்லை. உன் அழைப்பிற்குப் பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். நிச்சயமாக புகழ், அருட்கொடை, ஆட்சி யாவும் உனக்கே உரியது. உனக்குக் கூட்டுக்காரர் (எவரும்) இல்லை.
இந்தத் தல்பியாவை ஜம்ரத்துல் அகபா என்ற ஷைத்தானின் மீது கல்லெறியும் வரைக்கும் முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
மதிய வேளைக்கு முன்பதாக கஃபாவை விட்டுக் கிளம்பி, மினாவை நோக்கி நடக்க வேண்டும். ஹாஜி மினாவுக்குச் சென்று அங்கு லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழ வேண்டும். இவற்றில் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கித் தொழுது கொள்ள வேண்டும்.


துல்ஹஜ் 9 ஆம் நாள்:
இந்நாளில் பின் வருமாறு செயல்படுவது ஷரீஅத்தின் கட்டளையாகும்.
சூரியன் உதித்த பின்னர் ஹாஜி அராஃபாவிற்குச் சென்று அங்கு சூரியன் மறையும் வரை தங்க வேண்டும். சூரியன் உச்சி சாய்ந்து விட்டால் @ஹரையும் அஸரையும் சேர்த்து இரண்டு இரண்டு ரக்அத்தாகத் தொழ வேண்டும். தொழுகைக்குப் பின்னர் திக்ர், துஆ, தல்பியாவில் ஈடுபட வேண்டும். துஆவையும் அல்லாஹ்வுக்குப் பணிவதையும் அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும். தனக்காகவும் பிற முஸ்லிம்களுக்காகவும் துஆக் கேட்க வேண்டும். தான் விரும்பியவற்றையெல்லாம் கேட்கலாம். துஆச் செய்யும் போது கைகளை உயர்த்துவது விரும்பத்தக்காதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அரஃபாவில் கூடி இருக்கும் மக்களைப் பார்த்து, இறைவன் தன்னுடைய மலக்குமார்கள் முன்னிலையில் மிகவும் பெருமையுடன் இவ்வாறு கூறுகின்றான், என்னுடைய அடிமைகளைப் பாருங்கள், அவர்கள் தூசி படிந்த நிலையிலும், தலைவிரிகோலமாக என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். (அஹ்மது, மற்றும் பலர்)
அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் முதல் நிலைக் கடமைகளில் ஒன்றாகும். எவரேனும் அரஃபாவில் தங்கவில்லையானால் அவரது ஹஜ் நிறைவேறாது. அங்கு தங்குவதற்கான நேரம் 9 ஆம் நாள் சூரியன் உதயமானதிலிருந்து 10 ஆம் நாள் ஃபஜ்ர் உதயமாகும் வரையாகும். எனவே ஒருவர் இந்த நேரத்தின் இரவிலோ பகலிலோ கொஞ்ச நேரம் தங்கி விட்டால் அவரது ஹஜ் பூரணமடைந்து விடுகிறது. ஹாஜி அரஃபாவின் எல்கைக்குள் நுழைந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

அரஃபா தினத்தின் சூரியன் மறைந்து விட்டதென நன்கு தெரிந்தால் முஸ்தலிஃபாவை நோக்கி அமைதியாகவும் கம்பீரமாகவும் உரத்த குரலில் தல்பியாக் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும். சூரியன் மறைவதற்கு முன்பாக அரஃபாவை விட்டுக் கிளம்பக் கூடாது. அவ்வாறு கிளம்புபவர் ஒரு பாவத்தைச் செய்து விட்டவராவார். அவ்வாறு செய்யக் கூடியவர் உடனே அரஃபாவிற்குத் திரும்பி வந்து தங்குவதோடு, அவர் ஒரு பிராணியை பரிகாரமாகப் பலியிடுதல் வேண்டும்.

முஸ்தலிஃபா
முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிப், இஷாத் தொழுகைகளை சேர்த்து இஷாவை மட்டும் சுருக்கித் தொழ வேண்டும். தொழுத பின்னர் உணவு தயார் செய்வதையும் இன்ன பிற காரியங்களையும் செய்து கொள்ளலாம். ஃபஜ்ருத் தொழுகைக்கு சுறுசுறுப்பாக எழுந்து விடுவதற்காக சீக்கிரமாகத் தூங்குவது சிறப்பாகும்.
முஸ்தலிஃபாவில் பஜ்ருத் தொழுகை, சுன்னத் இரண்டு ரக்அத்துகளையும், பர்ளு இரண்டு ரக்அத்துக்களையும் நிறைவேற்ற வேண்டும்.
வயதான மற்றும் இயலாத நபர்கள் முஸ்தலிபாவிலிருந்து மீனாவுக்கு நடு இரவில் கிளம்பிச் சென்று, மினாவை அடைந்ததும் ஜம்ரத்துல் அகபா (ஷைத்தான்) வில் கல்லெறிந்து கொள்ளலாம்.


10 ஆம் நாள் (பெருநாள்)
10 ஆம் நாள் அன்று மக்காவின் கஃபா இருக்கும் திசையை நோக்கி, முடிந்தால் நின்று கொண்டு, உங்கள் முகத்தை கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து கீழ்க்கண்ட திக்ரை, நன்றாக விடியும் வரை ஓதிக் கொண்டிருப்பது நல்லது.
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர்.
இந்தத் திக்ரை ஃபஜ்ருத் தொழுகையின் நேரம் வந்து விட்டால் ஃபஜ்ருத் தொழுது விட்டு அதே இடத்தில் அமர்ந்து நல்ல வெளிச்சம் வரும் வரை திகர், துஆவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழு பொடிக் கற்களை பொறுக்கிக் கொண்டு தல்பியாக் கூறியவராக சூரியன் உதயமாகும் முன் மினாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஜம்ரத்துல் அகபா (ஜம்ரத்துல் குப்ரா) வை அடையும் வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அங்கே கற்களை ஒவ்வொன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல் எறியும் போதும் அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும்.
கல் எறிந்த பின்னர் அவர் ஹஜ்ஜுத் தமத்துஃ அல்லது ஹஜ்ஜுல் கிரான் செய்தவராக இருந்தால் குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி இறைச்சியை அவர் சாப்பிடுவதும் தர்மம் செய்வதும் விரும்பத்தக்கதாகும்.
குர்பானி கொடுத்த பின்னர் தலைமுடி முழுவதையும் மழிக்கவோ முழவதையும் வெட்டிக் கொள்ளவோ வேண்டும். மழிப்பதே சிறந்தது. பெண் ஒவ்வொரு தலைப் பின்னல்களிலிருந்தும் விரல் நுனி அளவிற்கு (சுமார் 3 செமீ.) வெட்டிக் கொள்ள வேண்டும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் தங்களது தலைமுடியை மழித்திக் கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் பேரருள் மும்மடங்கு கிடைக்கின்றது என்றார்கள்.
அதன் பின்னர் இஹ்ராமின் காரணமாக தடுக்கப்பட்டிருந்த ஆடை அணிதல், மணம் பூசுதல், நகம் வெட்டுதல், முடிவெட்டுதல் போன்ற அனைத்தும் ஹலாலாகும். எனவே அதன் பின்னர் அவர் குளிப்பது, சுத்தம் செய்வது, மணம் பூசுவது, ஆடைகள் அணிவது விரும்பத்தக்கதாகும். எனினும் உடலுறவு மட்டும் கஅபத்துல்லாவை வலம் வருவது வரை தடுக்கப்பட்டதாகவே இருக்கும். இதை முதல் நிலை இஹ்ராமிலிருந்து விடுபடுதல் என அழைக்கப்படுகின்றது.
முடியை மழித்து விட்டு பின்பு குளித்து விட்டு, ஹஜ்ஜுடைய தவாஃபை நிறைவேற்றுவதற்காக மஸ்ஜிதுல் ஹராமிற்குச் செல்ல வேண்டும். இதற்கு தவாஃபுல் இஃபாழா எனக் கூறப்படும். கஅபத்துல்லாவில் 7 தடவை வலம் வந்த பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். பின்னர் ஸயீச் செய்யுமிடத்திற்குச் சென்று ஸஃபா, மர்வா ஆகியவற்றிற்கிடையே ஏழு தடவை ஸயீச் செய்ய வேண்டும். ஸயீக்குப் பின்னர் இஹ்ராமின காரணமாகத் தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகும். மனைவியிடம் உடலுறவு கொள்வது உள்பட. இவர் தன்னுடைய இஹ்ராமைக் களைந்து விட்டு, இயல்பாக அவர் அணியக் கூடிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
அன்றைய தினமே ஹஜ்ஜுடைய தவாஃபை நிறைவேற்ற இயலாதவர்கள், தங்களது இஹ்ராமையும் அவர்கள் களைந்து விட்டு தங்களது இயல்பான ஆடைகளை அணிந்து கொண்டவர்கள், இத்தகையவர்கள் மீணடும் இஹ்ராம் ஆடையை அணிந்துகொண்டு அதனை, ஹஜ்ஜினுடைய தவாஃபை நிறைவேற்றும் வரைக்கும் அணிந்திருக்க வேண்டும். இது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுறுத்தலுமாகும்.
இஹ்ராமைக் களைவதற்கு அனுமதியளிக்கப்பட்ட இந்த நாளில், எப்பொழுது நீங்கள் ஜம்ராவுக்கு கல்லெறிந்து விட்டீர்களோ, அப்பொழுதிலிருந்து மனைவியிடம் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் மாலைக்குள் தவாஃபை நிறைவேற்றவில்லை என்றால், ஜம்ராவுக்கு கல்லெறிவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு இஹ்ராம் அணிந்திருந்தீர்களோ அது போலவே, ஹஜ்ஜினுடைய தவாஃப் செய்வதற்கு முன்பு அ ணிந்து கொள்ள வேண்டும்.
சில மார்க்க அறிஞர்கள், இவ்வாறு இஹ்ராமைக் கலைந்து விட்டு மீண்டும் இஹ்ராம் அணிந்து கொள்வது கடினமானது என்று கூறி, துல்ஹஜ் 10 அன்று தவாஃபுல் இஃபாழா (ஹஜ்ஜினுடைய தவாஃபை) வை நிறைவேற்றாமலேயே இஹ்ராமைக் கலைந்து விடலாம் என்று கூறுகின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்களோ, அவ்வாறே அவற்றைச் செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் நம்முடைய மனதில் கொள்ள வேண்டும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஹஜ்ஜினுடைய கிரியைகளை என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம் மற்றும் பலர்).
ஷரீஅத் சட்டப்படி, நமக்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் (குர்ஆன் மற்றும் சுன்னா) ஆகியவை இருந்தால், அவற்றிற்கு எதிராக எந்தக் கருத்தையும் நம்மால் கூற இயலாது, அந்தக் கருத்தை எவர் கூறினாலும் சரியே!
நீங்கள் ஹஜ் தமத்துஃ வைச் செய்தால், நீங்கள் மறுபடியும் ஸயீச் செய்ய வேண்டும். மற்றும் கிரான் அல்லது இஃப்ராத் முறைப்படி ஹஜ் செய்திருந்தால், நீங்கள் உங்களது முதல் வருகையின் பொழுது செய்யக் கூடிய (தவாஃபுல் குலூமில்) ஸயீச் செய்யவில்லையானால், இப்பொழுது நீங்கள் ஸயீ யைச் செய்தாக வேண்டும். இப்பொழுது நீங்கள் முழுவதுமாக இஹ்ராமிலிருந்து விடுபடலாம். இப்பொழுது, இஹ்ராமில் தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் உங்களுக்கு சட்டப்படி ஆகுமானதாக ஆகி விடுகின்றது.
ஹாஜி மினாவில் 11,12 ஆவது இரவுகள் தங்குவது கட்டாயமாகும். 12 ஆவது இரவு ஊருக்குப் புறப்படாமல் பிந்தி விடுபவர் 13 வது இரவும் தங்குவது கட்டாயமாகும். இரவு தங்க வேண்டுமென்பதன் கருத்து, இரவில் அதிக நேரம் அங்கு தங்க வேண்டுமென்பதாகும்.
கல்லெறிதல் பின்னர் குர்பானி கொடுத்தல் பின்னர் முடி எடுத்தல் பின்னர் வலம் வருதல் என வரிசைக்கிரமமாகச் செய்வது சுன்னத்தாகும். அவற்றை வரிசை மாற்றிச் செய்தாலும் குற்றமில்லை.
துல்ஹஜ் 11 ம் நாள்
இப்பொழுது ஹாஜிகள் மினாவுக்குத் திரும்பி வர வந்து 11, 12, 13 ஆகிய நாட்களை அங்கு தங்கிக் கழிக்க வேண்டும். இந்த நாட்களில் நான்கு ரக்அத் தொழுகைகளைச் சுருக்கி, இரண்டு ரக்அத்துக்களாகத் தொழ வேண்டும்.
இந்நாளில் ஹாஜி கல்லெறிவது கட்டாயமாகும். சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து கல்லெறிதல் நேரம் ஆரம்பமாகி விடுகின்றது. அதற்கு முன்னால் கூடாது. சிறிய தூணிலிருந்து, அதாவது மஸ்ஜிதுல் கைப்பிற்கு அருகில் உள்ள தூணிலிருந்து ஆரம்பித்துப் பின்னர் நடுத்தூணில் எறிந்த பின்னர் பெரிய தூணில் எறிந்து முடிக்க வேண்டும்.
கல்லெறியும் முறை
21 பொடிக் கற்களை தன்னுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிய தூணுக்குச் சென்று ஏழு கற்கைளை ஒவ்வொரு கல்லுடனும் அல்லாஹஅக்பர் எனக் கூறி எறிய வேண்டும். கற்கள் தொட்டியினுள் விழுவதைக் கவனிக்க வேண்டும். கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும்.
சிறிது வலது பாகம் சென்று நின்று கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்வது சுன்னத்தாகும்.
இதன் பிறகு நடுத்தூணுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக அல்லாஹு அக்பர் எனக் கூறி எறிய வேண்டும்.
பிறகு சிறிது இடது புறம் சென்று நின்று கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்வது சுன்னத்தாகும்.

பெரிய தூணுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும். பின்பு அங்கு நிற்காமல் சென்று விட வேண்டும். இங்கு துஆச் செய்யத் தேவையில்லை.


துல்ஹஜ் 12 ஆம் நாள்
11 ஆம் நாள் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹாஜி தாமதமாகி 13 ஆவது நாளும் தங்கியிருக்க விரும்பினால் அதுவே சிறந்ததாகும். அப்படி இருந்து விட்டால் 11, 12 ஆவது நாட்களில் செல்வது போலவே செய்து கொள்ள வேண்டும். 12 ம் நாளன்று மினாவை விட்டுக் கிளம்ப முடிவு செய்து விட்டவர்கள், அன்றைய தினம் மாலை நேரத்திற்கு முன்பாக, சூரியன் மறைவதற்குள் மினாவை விட்டுக் கிளம்பி விட வேண்டும். 13 ஆம் நாளும் மினாவில் தங்கிச் செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
12 ஆம்நாள் கல்லெறிந்த பின்னர் அல்லது தாமதமாகச் செல்பவர் 13 ஆம் நாள் கல்லெறிந்த பின்னர் கஅபாவிற்குச் சென்று தவாஃப் செய்ய வேண்டும். கல்லெறியும் இடத்தில் கடுமையான கூட்டமாக இருந்தால், கல்லெறிவதைத் தாமதம் செய்து, இரவு நேரத்தில் கூட கல்லெறியலாம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிவதற்கென (லுஹருக்குப் பின்பு) துவக்க நேரத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள், ஆனால் அதன் இறுதி நேரத்ததைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு முடிந்தால் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் நின்று அல்லது முடியாவிட்டால் பள்ளியின் ஏதாவதொரு பாகத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னத்தாகும். இத் தவாஃப் மாதவிடாய்ப் பெண்ணுக்கும் பிரசவத்துடக்குடைய பெண்ணுக்கும் கிடையாது.
இதன் பின்னர் ஹாஜி வேறு எதிலும் ஈடுபடாமலிருப்பது கட்டாயமாகும். எனினும் துஆ, திக்ர், பயனுள்ளவற்றைச் செவியேற்பது போன்றவற்றில் ஈடுபட்டவராக மக்காவிலிருந்து வெளியேற வேண்டும். தவாஃபுக்குப் பின்னர் - நண்பர்களை எதிர்பார்ப்பது அல்லது சாமான்களை எடுத்துக் கொள்வது அல்லது வழியில் தேவைப்படுபவற்றை வாங்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக சிறிது நேரம் தங்கியிருப்பது குற்றமல்ல.


பெருநாள் தினம்
ஹாஜிகள் பெருநாள் தினத்தை (துல்ஹஜ் 10 ஆம் நாள்) இந்த முறைப்படி அமைத்துக் கொள்வது நல்லது.
• ஜம்ரத்துல் அகபா வில் கல்லெறிவது.
• குர்பானி கொடுப்பது
• தலைமுடி மழிப்பது அல்லது தலைமுடியைக் குறைப்பது
• தவாஃபுல் இபாழா
• ஸயீச் செய்தல் (தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்தவர்கள் மட்டும்)
இது தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைபிடித்த ஹஜ்ஜின் வழிமுறையாகும். இதில் எதுவொன்றை மாற்றிச் செய்தாலும் அதனால், எந்தத் தவறும் நிகழ்ந்து விடாது.


சில முக்கியக் குறிப்புகள்
• கல்லெறிவதற்குச் சக்தியற்ற பலஹீனர்கள், வயோதிகர்கள், நோயாளிகள், சிறு குழந்தைகள் ஆகியோர்களுக்குப் பதிலாக இன்னொருவர் கல்லெறிய அனுமதி உண்டு.
• ஹஜ்ஜுச் செய்யக் கூடியவர், தன்னுடைய நாவினைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொய், புறம், திட்டுதல், வீண் விவாதம் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
• ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடியவர், தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக வேண்டி நல்ல நண்பர்களை, இறையச்சமுடையவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, வழிச் செலவுகளுக்குரிய போதுமான பணத்தையோ அல்லது அதற்குத் தேவையான பொருளீட்டுவதற்குண்டானவற்றையோ ஏற்பாடுகள் செய்து கொண்டு செல்ல வேண்டும். வழிச் செலவுகளுக்கு ஹஜ்ஜின் பொழுது, வியாபாரம் செய்து கொள்ளலாம்.
• இஹ்ராமில் இருக்கக் கூடியவர் குளிக்கலாம், குளித்த பின் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு துண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசனையற்ற சோப்பு அல்லது துணி துவைக்கப் பயன்படும் சோப்புப் பவுடர்களை உபயோகித்துக் கொள்ளலாம்.
• துல்ஹஜ் 13 ம் நாளன்று சூரியன் மறையும் வரையும், குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுதலைப் பிற்படுத்தலாம்.
• மக்காவை விட்டு வெளியேற முடிவெடுத்து விட்ட ஹாஜி, தவாஃபுல் வதா (பிரயாண தவாஃபை) செய்யாமல் வெளிக்கிளம்பக் கூடாது.
• மாதவிடாய்த் தீட்டு, குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள தீட்டு உள்ள பெண்கள் பிரயாண தவாஃபை நிறைவேற்றாமல், மக்காவை விட்டு வெளியேறுவதில் தவறில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கென இந்தப் பிரத்யேக அனுமதியைத் தந்துள்ளார்கள். (அஹ்மது, அபூதாவூது).
ஹஜ்ஜின் பொழுது நடைபெறக் கூடிய பித்அத்-கள்
((முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்கள்)
• மஹ்ரமான ஆண்களின் துணை இல்லாமல், பெண்கள் தனியாகவோ அல்லது பெண்கள் குழுவாகவோ ஹஜ்ஜுச் செய்யச் செல்வது
• மீகாத் எல்லையை அடைவதற்கு முன்பாகவே இஹ்ராமில் பிரவேசிப்பது
• தல்பியாவை ஒன்று சேர்ந்து முழங்குவது (அவரவர் தனித் தனியாகத் தான் தல்பியாக் கூற வேண்டும்)
• மக்காவைச் சுற்றியுள்ள பள்ளிகளைச் சுற்றிப் பார்ப்பது
• மக்காவைச் சுற்றியுள்ள ஹிரா மற்றும் மற்ற மலைகளைச் சுற்றிப் பார்ப்பது
• தன்ஈம் ல் உள்ள ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பள்ளிக்குச் சென்று, அதிகப்படியான உம்ராவுக்காக அங்கு இஹ்ராம் அணியச் செல்வது
• தொழுகைக்கு கையை உயர்த்துவது போல, ஹஜருல் அஸ்வத் கல்லைக் கண்டதும் கைகளை உயர்த்துவது
• யமனி முனையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிச் சைகை செய்வது
• ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு கபனாடைகளையும், ஆடைகளையும் கழுவுவது
• ஹஜ்ஜின் பொழுது, ஒன்றுக்கும் மேற்பட்ட உம்ராக்களைச் செய்வது
• நபிலான வகையில் ஸயீச் செய்வது
• தொழுது கொண்டிருக்கும் நபர்களுக்கு முன்னால் நடந்து செல்வது.


மதினா ஜியாரத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியில் தொழுவதற்காக அதைத் தரிசிப்பது முஸ்தஹப்பானதாகும் (விரும்பத்தக்கதாகும்.).
இங்கு தொழுவது மஸ்ஜிதுல் ஹரம் அல்லாத ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். இப்பள்ளியைத் தரிசிப்பது ஷரீஅத்தின் நடைமுறை என்பது காலம் முழுவதுமாகும். அதற்கென குறிப்பிட்ட நேரம் கிடையாது. அது ஹஜ்ஜில் செய்ய வேண்டிய காரியங்களில் உள்ளதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் இப்பள்ளியில் இருக்கும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரையும் அவர்களின் இரு நண்பர்களான அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு , உமர் ரளியல்லாஹு அன்ஹு , ஆகியோர்களின் கப்றுகளையும் சந்திப்பது முஸ்தஹப்பாகும். கப்று ஜியாரத் ஆண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கமாகியுள்ள அறையின் பகுதியைத் தொடுவது அல்லது அதை வலம் வருவது அல்லது துஆச் செய்யும் போது, அதை முன்னோக்குவது கூடாது.
மதினாவில் மஸ்ஜிதுல் கூபா விற்கும் சென்று, அங்கு இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும். அதில் தொழுவது, உம்ராச் செய்த நன்மையைப் பெற்றுத் தரும்.