ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு

சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் அரிசியை, மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு அனுமதி பெற்ற பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிப்பதற்கு தேவையான அரிசிக்குரிய மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவார்கள்.

ரம்ஜான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 3,801 டன்கள் அரிசியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளிலும் 29.7.2011 அன்றே தயார் நிலையில் வைத்திருக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தமிழகத்தில் அனுமதி பெற்று ஏற்கனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் பள்ளி வாசல்கள் மொத்த அனுமதியை புதுப்பித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் பெற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து அரிசியை பெற்றும் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.