முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள, http://www.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும்.